Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பூவரசனைப் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

பூவரசனைப் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்

Share:

சிரம்பான், ஆகஸ்ட்.11-

கடந்த வாரம், சிரம்பான், ஜாலான் தெமியாங் அருகில் புக்கிட் ஜோங் என்ற இடத்தில் 18 வயது மோட்டார் சைக்கிளோட்டியை நேருக்கு நேர் மோதி, மரணம் விளைவித்த சம்பவம் தொடர்பில் தனது மெர்சடிஸ் பேன்ஸ் காரைக் கைவிட்டவாறு, சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்ட ஆர். பூவரசன் என்பவரைப் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

28 வயதுடைய பூவசரன், இந்த விபத்துக்குப் பிறகு தலைமறைவாகி விட்டார். எந்தவொரு போலீஸ் நிலையத்திலும் இவ்விபத்து குறித்து புகார் செய்யவில்லை என்று சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹாட்டா சே டி தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி நிகழ்ந்த இந்த விபத்துக்கு இதுவரையில் போலீசாரிடம் சரண் அடையாத பூவரசனுக்கு 10க்கும் மேற்பட்ட குற்றப்பதிவுகள் இருப்பதைப் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

போலீசார், தன்னைக் கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பியுள்ளார் என்று பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று ஏசிபி ஹாட்டா குறிப்பிட்டார்.

பூவரசன் பயன்படுத்திய மெர்சடிஸ் பேன்ஸ் காரைப் பரிசோதனை செய்ததில் வீடு புகுந்து திருடுவதற்குப் பயன்படுத்தப்படும் சுத்தியல், கையுறைகள், இரும்பு வெட்டி போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

சம்பந்தப்பட்ட நபரைப் பார்த்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடம் தெரிந்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை ஏசிபி ஹாட்டா கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News