ஈப்போ, நவ.11-
கிரிக் – ஜெலி நெடுஞ்சாலையில் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் புலி ஒன்றை மோதித்தள்ளிய நபர், புலன் விசாரணைக்கு ஏதுவாக போலீசில் புகார் அளிக்கும்படி இன்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக வனவிலங்கு, தேசிய பூங்கா இலாகாவான பெர்ஹிலித்தான், செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக பேரா மாநில இடைக்கால போலீஸ் தலைவர் ஏசிபி ஸுல்காப்லி சரியாட் தெரிவித்தார்.
சாலையோரத்தில் இறந்து கிடந்த புலியின் உடல் பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்டு, களவாடப்பட்டுள்ளதாக பெர்ஹிலித்தான் செய்து கொண்ட புகாரைத் தொடர்ந்து விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
புலியின் நான்கு கோரைப் பற்கள், நகங்கள், தோல், புலியின் வால் போன்றவற்றை சட்டவிரோத வேட்டைக்காரர்கள் களவாடியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. புலியின் பாகங்களை வைத்திருப்பவர்கள் அல்லது அவற்றை விலைக்கு வாங்கியவர்கள் போலீஸ் துறையிடம் ஒப்படைக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். வனவிலங்க உடல் பாகங்களை வைத்திருப்பது 1946 ஆம் ஆண்டு வன விலங்கு சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்று ஏசிபி ஸுல்காப்லி சரியாட் தெரிவித்தார்.








