கோலாலம்பூர், பிப்ரவரி.02-
கடந்த 2005-ஆம் ஆண்டு தான் சிறுவனாக இருந்த போது, இயற்கைக்கு மாறான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார் அளித்த ஒரு நடிகரிடம் கோலாலம்பூர் போலீசார் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து 35 வயதான அந்த நடிகர் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது வாக்குமூலம் ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்யப்பட்டதாகக் கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.
இதுவரை இந்தப் புகார் தொடர்பாக நடிகரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில், இந்தச் சம்பவம் 2005-ஆம் ஆண்டில் நடந்ததாகத் தெரிய வந்துள்ளது என்று அவர் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வரை இது தொடர்பாகக் கைது நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 377C-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.
முன்னதாக, தான் சிறுவனாக இருந்த போது செல்வாக்குமிக்க மற்றும் உறவினர் முறை கொண்ட ஒரு நபரால் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதாக அந்த நடிகர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.








