கோலாலம்பூர், நவ.9-
ஒரு மாநிலத்தின் குத்தகைத் திட்டங்களை பெற்றுத்தருவதற்கு சில சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சக் கணக்கான பணத்தை லஞ்சம் கேட்டு, பேரம் பேசியதாக கூறப்படும் எட்டு வீடியோக்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளையில் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி மாநிலத்தில் அரசு உயர்ப்பதவிகள் வகித்து வருகின்றவர்களின் பெயர்களும் அதில் சம்பந்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனை வெளிகொணர்ந்துள்ள தரப்பினர், இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள சில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளின் பெயர்களை ஆதராப்பூர்வமான ஒப்படைப்பதற்கு முன்னதாக, 2010 ஆம் ஆண்டு தகவல் வழங்கியர்களை பாதுகாக்கும் சட்டத்தின் வாயிலாக தாங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.மை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கு முன்பு இந்த விவகாரம் எஸ்.பி.ஆர்.எம். கவனத்திற்கு தாங்கள்கொண்டு சென்று இருப்பதையும் அத்தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். தங்களுக்கு எஸ்.பி.ஆர்.எம். ஓர் உத்தரவாதத்தை வழங்குமானால், அந்த பேரத்தில் எந்ததெந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டனர், அவர்களுக்கு இடையில் நிகழ்ந்த உரையாடல்கள் யாவை என்பது தொடர்பான காணொளிகளை வழங்குவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக சம்பந்தப்பட்டுள்ளவர்கள் அறிவித்துள்ளனர்.








