அண்மையில் கிள்ளான் , தாமான் சி லியுங் வீடமைப்புப்பகுதியில் வீடு ஒன்றில் நுழைந்த வயதான கணவன் மனைவியை பாராங் முனையில் கொள்ளையிட்டதாக நம்பப்படும் ஆயுதமேந்திய கொள்ளைக்கும்பலை போலீசார் வளைத்துப் பிடித்துள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கடந்த நவம்பர் 18 ஆம் தேதி போலீசார் தகவல் பெற்றதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபாங் தெரிவித்தார்.
அதிகாலை 3.30 மணியளவில் நிகழ்ந்த இக்கொள்ளைச் சம்பவத்தில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 61 வயது தம்பதியரிடம் ரொக்கப்பணத்தையும் ஆபரணங்களையும் கொள்ளையிட்டுள்ளர்.
இச்சம்பவம் தொடர்பில் அதிகாலை 4.15 மணியளவில் சிலாங்கூர் கடுங் குற்றத் தடுப்பு பிரிவான டி9 னைச் சேர்ந்த போலீஸ் குழு ஒன்று, கிள்ளான் ஜாலான் ஹாங் ஹுவாட் டில் உள்ள ஒரு வீட்டில் நடத்திய திடீர் சோதனையில் இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் என்று நம்பப்படும் ஏழு பேரை கைது செய்துள்ளனர் என்று ஏசிபி சா ஹூங் ஃபாங் குறிப்பிட்டார்.
இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
39 வயது மோகன் ராஜ் மூக்கையா என்ற சினி கண்ணா, 51 வயது ரவிச்சந்தின் ராமகிருஷ்ணன் என்ற பழத்தோட்டம் ரவி மற்றும் 44 வயது லெட்சுமணன் சங்கரன் என்ற லாச்சி ஆகிய மூவரை போலீசார் தேடி வருவதாக ஏசிபி சா ஹூங் ஃபாங் தெரிவித்தார்.








