புத்ராஜெயா, ஜனவரி.06-
இன்று தமது வீட்டில் வழுக்கி விழுந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் துன் முகாதீர் முகமது, விரைவில் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டும் என்று இறைவனைத் தாம் பிரார்த்திப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
100 வயதான துன் மகாதீர், இன்று காலை 7.30 மணியளவில் தமது இல்லத்தின் பால்கனியிலிருந்து வரவேற்பறைக்குச் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
காலை 9.30 மணியளவில் அவர் அம்புலன்ஸ் மூலம் தேசிய இருதய சிகிச்சைக் கழகமான ஐஜேஎன் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.
துன் மகாதீர், தற்போது சுயநினைவுடன், உடல்நிலை சீராக உள்ளதாக அவரது ஊடகச் செயலாளர் சுஃபி யுசோஃப் தெரிவித்துள்ளார். வயது மூப்பு காரணமாக மருத்துவர்கள் அவரைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.








