கோலாலம்பூர், பிப்ரவரி.22-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை டான் ஶ்ரீ அஸாம் பாக்கி, புளூம்பெர்க் ஊடக நிறுவனத்திற்கு எதிராகத் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கிற்கு 'மலேசிய ஊழல் கண்காணிப்பு அமைப்பு' – MCW தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. பங்குகளை வைத்திருந்தது தொடர்பாகத் தவறான மற்றும் அவதூறான செய்தியை வெளியிட்டதற்காக, 100 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி அவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். ஊடக சுதந்திரம் என்பது பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், ஆதாரமற்ற செய்திகளால் ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் போது சட்ட அடிப்படையில் போராடுவது முறையான அணுகுமுறை என்றும் அவ்வமைப்பின் தலைவர் ஜாயிஸ் அப்துல் காரிம் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், பொதுமக்கள் இது குறித்து வீண் ஊகங்களைப் பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.








