ஈப்போ, டிசம்பர்.08-
ஈப்போவில் உள்ள அரசாங்க மருத்துவமனையான ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் அவசரப் பிரிவில் நோயாளிகள் எதிர்நோக்கும் இட நெருக்கடி மற்றும் போதிய கட்டில்கள் பற்றாக் குறை பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று சட்டத் சீர்திருத்தங்களுக்கான துணை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்தார்.
ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனை, 1891 ஆம் ஆண்டு ஈப்போ மாவட்ட மருத்துவமனையாகச் செயல்பட்டு வந்தது. பின்னர் 1942 ஆம் ஆண்டு அரசு மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டது.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி ராஜா பெர்மைசூரி் பைனுன் என்ற பெயரில் அந்த அரசு மருத்துவமனை பெயர் மாற்றம் கண்டது.

பராமரிப்பு வளாகங்கள் உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்புகளைக் கொண்ட மலேசியாவின் மூன்றாவது மிகப் பெரிய மருத்துவமனையாக விளங்கி வரும் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனை, நோயாளிகள் தங்கி சிகிச்சைப் பெற போதிய கட்டில்கள் இல்லாமல் நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதாக இன்று காலையில் அந்த மருத்துவமனையின் அவசரப் பிரிவை பார்வையிட்ட ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரான குலசேகரன் தெரிவித்தார்.
முன்னதாக, மருத்துவமனையின் நடப்பு நிலை குறித்து பேரா மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் ஃபெய்சுல் இட்ஸ்வான் முச்தஃபா, துணையமைச்சருக்கு விளக்கம் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை அமைச்சர் குலசேகரன், மருத்துவமனையின் கழிப்பறைச் சீரமைப்புக்கு உடனடி உதவித் தொகையாக 50 ஆயிரம் ரிங்கிட் வழங்கவிருப்பதாக விவரித்தார்.
அதே வேளையில், மக்கள் உடல் நலத்தைப் பாதுக்க வேண்டிய அவசியத்தையும் துணை அமைச்சர் எம்.குலசேகரன் வலியுறுத்தினார்.








