சென்னை, டிச.6-
கடந்த செவ்வாய்க்கிழமை கோலாலம்பூரில் இருந்து சென்னை சென்றடைந்த மலேசிய விமானத்தில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பயணிகளின் பயணப்பெட்டிகளில் 5,191 நட்சத்திர ஆமைகள் கண்டு பிடிக்கப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது, மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் நட்சத்திர ஆமைகள் இரண்டு பயணிகளின் பயணப்பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் சென்னையைச் சேர்ந்த ரமேஷ் ஆகாஷ், தமிம் அன்சாரி முகமது ரபிக் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவிற்கு சுற்றுலாப்பயணத்தை முடித்துக்கொண்டு அவர்கள் சென்னை திரும்பிய போது இந்த நட்சத்திர ஆமைகளை கடத்தி வந்துள்ளனர்.
மிக அரிய வகை ஆமையான இவை, வர்த்தக நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுவதற்கு தென்கிழக்காசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு காது உள்ள அலங்கார நட்சத்திர ஆமைகள் ஏராளமானவை உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த அலங்கார நட்சத்திர ஆமைகள் பெரிய பங்களாக்களில் அலங்கார தொட்டிகளில் காட்சிப்பொருளாக வைத்து வளர்த்து வருகின்றனர். மேலும் மருந்துகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.








