தொழிலதிபரும் சமூக ஊடக பிரபலருமான அலிஃப் சுக்ரி காமர்சமான்க்கு எதிராக முன்னாள் அமைச்சர் அப்துல் காதிர் ஷேக் ஃபட்சீர் தாக்கல் செய்திருந்த அவதூறு வழக்கில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
தனது அவதூறான சமூக ஊடக பதிவுகள் தொடர்பாக, அலிஃப் சுக்ரி, முன்னாள் அமைச்சரான அப்துல் காதிர்க்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், வழக்குச் செலவாக 50 ஆயிரம் ரிங்கிட் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கலாச்சாரம், கலை மற்றும் சுற்றுலாத்துறை முன்னாள் அமைச்சரான 86 வயதான அப்துல் காதிர் ஷேக் ஃபட்சீர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அலிஃப் சுக்ரியின் சர்ச்சைக்குரிய சமூக ஊடக பதிவுகள் தொடர்பாக, அவர் மீது வழக்குத் தொடுத்திருந்தார்.
மில்லியன் கணக்கில் காதிர் கடன் பட்டுள்ளார் என்று அலிஃப் சுக்ரி சமூக ஊடகத்தில் கூறியதாகவும், அந்த குற்றச்சாட்டு தனது நற்பெயருக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியதாகவும் காதிர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.








