கோலாலம்பூர், டிசம்பர்.28-
டேசா பெட்டாலிங்கில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் 6 மாத, 9 மாதக் கைக்குழந்தைகளைக் கொடூரமாகத் தாக்கித் துன்புறுத்திய 26 வயது இளம் பெண் ஒருவரைக் காவற்படை அதிரடியாகக் கைது செய்துள்ளதாக செராஸ் மாவட்டக் காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் அய்டில் போல்ஹசான் தெரிவித்தார். காப்பகத்தில் குழந்தைகள் அறையப்படுவதும், தூக்கி வீசப்படுவதும் போன்ற பதற வைக்கும் காணொளிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவி, ஒட்டு மொத்தப் பெற்றோர்களையும் பெரும் அதிர்ச்சியிலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது.
"ஒன்பது மாதம் சுமந்து, நான்கு ஆண்டுகள் தவமிருந்து பெற்ற என் பிஞ்சுக் குழந்தை என்ன பாவம் செய்தது?" எனப் பாதிக்கப்பட்ட தாய் கண்ணீருடன் பதிவிட்ட Threads சமூக வலைதளப் பதிவு வலைத்தளவாசிகளின் நெஞ்சைப் பிழிவதாக உள்ளது. இந்த மனிதாபிமானமற்ற செயல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் காவற்படையினர், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட பெண் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.








