சாலைப் பாதுகாப்பு என்பது வெறும் விழிப்புணர்வுடன் நின்றுவிடாமல், அது ஒரு புரிதலாகவும், பொறுப்புணர்வாகவும் மாற வேண்டும் எனப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
இன்று TAR UMT பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற "Spot It: பிளைண்ட் ஸ்பாட்ஸ் மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு" பிரச்சாரத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய அவர், கனரக வாகனங்களின் மறைமுகப் பகுதிகள் (Blind Spots) மற்றும் கவனக்குறைவான ஓட்டுநர் முறைகளால் ஏற்படும் விபத்துகள் கவலையளிப்பதாகக் குறிப்பிட்டார்.
"மாணவர்கள் இத்தகைய பிரச்சாரங்கள் மூலம் சாலை அபாயங்களை நேரில் கண்டு உணரும்போது, அது அவர்களின் ஓட்டுநர் நடத்தையில் ஒரு நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்தும்," என்று அவர் கூறினார்.
இளைஞர்களைச் சாலைப் பாதுகாப்புத் தூதர்களாக உருவாக்கும் 'MyGENTERA' திட்டத்தையும் அமைச்சு முன்னெடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சாலைப் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல; கல்வி நிறுவனங்கள், தனியார் துறையினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இணைந்து செயல்பட வேண்டிய கூட்டுப் பொறுப்பு என்று அமைச்சர் அந்தோணி லோக் தனது உரையில் வலியுறுத்தினார்.








