கோலாலம்பூர், மார்ச்.01-
கிளந்தான், ஜெலியில் உள்ள கம்போங் லுபோக் போங்கோரில் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டு வந்த மரம் அறுக்கும் ஆலை ஒன்றை அதிரடிப்படையும் வனத்துறை அதிகாரிகள் இணைந்து முறியடித்தனர். இந்தச் சோதனையில், சுமார் 4.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மரக்கட்டைகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் என மொத்தம் 5.17 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முறையான அனுமதிப் பத்திரங்கள் இன்றி இயங்கி வந்த அந்த ஆலையில் பணியாற்றிய இரண்டு உள்ளூர் பெண்கள் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் வன வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில், இது போன்ற சட்டத்திற்குப் புறம்பான காடழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என அதிரடிப் படையின் கமாண்டர் மூத்த உதவி ஆணையர் ரொஸ்லி முஹமட் யுசோஃப் எச்சரித்துள்ளார்.








