Mar 4, 2026
Thisaigal NewsYouTube
மாநில ரீதியாக இந்து அறப்பணி வாரியங்கள் அமைக்கப்பட வேண்டும்:  ஒற்றுமைத்துறை அமைச்சு பரிந்துரை
தற்போதைய செய்திகள்

மாநில ரீதியாக இந்து அறப்பணி வாரியங்கள் அமைக்கப்பட வேண்டும்: ஒற்றுமைத்துறை அமைச்சு பரிந்துரை

Share:

அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி, இந்து அறப்பணி வாரியங்கள் மாநில அளவிலேயே நிறுவப்பட வேண்டும் என்று தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு இன்று பரிந்துரை செய்துள்ளது.

நாடாளுமன்ற மேலவையில் உரையாற்றிய துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன், கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலின்படி, சமய விவகாரங்கள் மாநிலங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்று குறிப்பிட்டார்.

எனவே, சமயம் சார்ந்த வாரியங்கள், நிறுவனங்கள் அல்லது வக்காஃப் அமைப்புகளை நிறுவுவது உள்ளிட்ட எந்தவொரு கொள்கை மற்றும் அணுகுமுறைகளும் அந்தந்த மாநிலங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டிருக்க வேண்டும். அறப்பணி வாரிய நிர்வாகங்கள் சட்டப்பூர்வமாகவும் முறையாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்த இது மிக அவசியமானது, துணை அமைச்சர் யுனேஷ்வரன் கூறினார்.

மேலும், பினாங்கு மாநிலத்தில் நடைமுறையில் உள்ள பினாங்கு இந்து அறப்பணி வாரியம் போன்று மற்ற மாநிலங்களும் தமக்கான இந்து அறப்பணி வாரியங்களை அமைப்பதற்குக் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு முழு ஆதரவை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சமய விவகாரங்களில் மாநிலங்களின் இறையாண்மைக்கு மதிப்பளிப்பதையும், தேசிய ஒருமைப்பாட்டைப் பேண கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் ஒருங்கிணைந்த கொள்கைகளை உருவாக்குவதில் மத்திய அரசு கொண்டுள்ள உறுதியையும் இந்த ஆதரவு பிரதிபலிக்கிறது என்று யுனேஸ்வரன் மேலும் கூறினார்.

கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள தேவி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய நில விவகாரத்தைத் தொடர்ந்து, ஆலயங்கள் தொடர்பான சிக்கல்களைக் கையாள தேசிய அளவில் ஓர் இந்து அறப்பணி வாரியம் அமைக்கப்பட வேண்டும் என செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் முன்வைத்த பரிந்துரைக்குத் துணை அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் கடந்த 1906-ஆம் ஆண்டு முதல் பினாங்கு மாநில அரசின் கீழ் இயங்கி வருவதுடன், மத்திய அரசின் தணிக்கை மற்றும் நாடாளுமன்றக் கண்காணிப்பிற்கு உட்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News