சமய விவகாரங்கள் குறித்து பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசியதாகக் கூறி இருவர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தில், உள்துறை அமைச்சர் சைஃபுதீன் இஸ்மாயில் மற்றும் தேசிய போலீஸ் படைத் தலைவர் காலித் இஸ்மாயில் ஆகியோர் முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும் என ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தியுள்ளார்.
சம்பந்தப்பட்ட இருவரும் 30 மற்றும் 60 வயதுகளில் உள்ளவர்கள் என்றும், அவர்கள் பங்கேற்ற பாட்காஸ்டில் மதச்சார்பின்மை மற்றும் தாராளமயம் குறித்து பேசப்பட்ட காணொளித் துணுக்கை அடிப்படையாகக் கொண்டு அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கிள்ளான் உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ராம்சே எம்போல் கூறுகையில், இருவர் மீதும் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தது மற்றும் சமய உணர்வுகளைப் புண்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அந்தப் பாட்காஸ்டில் சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் விவகாரம் என்ன என்பது குறித்து பொதுமக்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என ஆர்எஸ்என் ராயர் தெரிவித்துள்ளார். “பாட்காஸ்ட் செய்வது குற்றமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அரசியல் விவாதங்களில் கருத்து தெரிவிப்பதற்காக பழிவாங்கப்படுவோம் என்ற அச்சம் நிகழ்ச்சியாளர்களுக்கு ஏற்படக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சைக்குரியதாகவோ அல்லது சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடியதாகவோ இருந்தாலும், அரசியல் கருத்துகளை வெளிப்படுத்துவது தானாகவே கைது நடவடிக்கைக்கு வழிவகுக்கும் குற்றமாக மாறிவிடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய கைது நடவடிக்கைகள் சீர்திருத்த இயக்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்புடையதல்ல என்றும் ராயர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ரிதுவான் டீ அப்துல்லா மீது இனவாத மற்றும் தூண்டுதல் கருத்துகளை வெளியிட்டதாகக் கூறி அளிக்கப்பட்ட புகார் தொடர்பான விசாரணையின் நிலவரத்தையும் போலீசார் வெளியிட வேண்டும் என ராயர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல், ஜெம்போல் நாடாளுமன்ற உறுப்பினர் ஷம்சுல்கஹார் டெலி, சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் கருதப்படும் ஒரு படத்துடன் ஜசெக கட்சியைத் தொடர்புபடுத்திப் பேசியதாகக் கூறப்படும் விவகாரத்தில் நடைபெற்று வரும் விசாரணையின் நிலவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.








