கால்பந்து சங்கம் சம்பந்தப்பட்ட 60 லட்சம் வெள்ளி லஞ்ச ஊழல் தொடர்பான விசாரணைக்கு கெடா மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முஹமாட் சனுசி முஹமாட் நோர், புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு இன்று வியாழக்கிழமை காலையில் அழைக்கப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் அளிப்பதற்காக அழைப்பாணை அனுப்பட்டுள்ள முகமட் சனூசி நூர்,காலை 8.30 மணியளவில் எஸ்பிஆர்எம் தலைமையக கட்டடத்தை வந்தடைந்தார். விசாரணைக்கு சனூசி ஆஜராகியிருப்பதை எஸ்பிஆர்எம் விசாரணை பிரிவின் முதிர்நிலை இயக்குநர் டத்தோ ஶ்ரீ ஹிஷாம்ஹுடின் ஹஷிம்உறுதி படுத்தினார்.
கெடா மாநில கால்பந்தாட்ட சங்கத்திற்கு தேவையான நிதியை வழங்கினால் அதற்கு கைமாறாக மாநிலத்தில் உள்ள அரசு கட்டுமான குத்தகைகள் வழங்குவதாக கெடா மாநிலத்தில் உயரிய பதவி வகிக்கும் ஒருவர் வாக்குறுதி அளித்து இருந்ததாக குத்தகையாளர் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் எஸ்பிஆர்எம் விசாரணைக்கு சனூசி உட்படுத்தப்பட்டுள்ளதாக இதற்கு முன்பு ஊடகங்கள் தெரிவித்து இருந்தன.
அந்த மாநிலத் தலைவர் அளித்த உத்தரவாதத்திற்கு ஏற்ப சம்பந்தப்பட்ட கால்பந்து சங்கத்தின் வங்கி கணக்கில் 60 லட்சம் வெள்ளிக்கும் ம் அதிகமான தொகை செலுத்தப்பட்ட பின்னர் தங்களுக்கு அந்த குத்தகைத் திட்டங்கள் கிடைக்கவில்லை என்ற சம்பந்தப்பட்ட குத்தகை நிறுவனம் எஸ்பிஆர்எம் மில் புகார் செய்துள்ளது.








