ஜோகூர் மாநிலத்தைப் பின்பற்றி நெகிரி செம்பிலான் சட்டமன்றம் அதிரடியாகக் கலைக்கப்படுமா என்பது இன்னும் பெரும் அரசியல் புதிராகவே நீடிக்கிறது. ஜோகூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டால் நெகிரி செம்பிலானும் கலைக்கப்படும் என்று ஜசெக பொதுச்செயலாளர் அந்தோனி லோக் முன்னதாகக் கூறியிருந்ததே இதற்கு முக்கியக் காரணமாகும்.
இந்நிலையில், நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாரூன், இன்று புதன்கிழமை நெகிரி செம்பிலான் யாங் டி-பெர்துவான் பெசாருடன் நடத்திய சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான சந்திப்பை விட இந்த சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் மிக நீண்டதாக நீடித்ததே இந்த பரபரப்புக்குக் காரணமாகும்.
ஜோகூர் மாநில தேர்தலும், நெகிரி செம்பிலான் மாநில தேர்தலும் ஏககாலத்தில் நடத்தப்படுவதற்கான சாத்தியம் இருப்பதையும் அரசியல் பார்வையாளர்கள் மறுக்கவில்லை.








