கோலாலம்பூர், நவம்பர்.11-
நாடாளுமன்றத்தில், பிரதமருக்கான கேள்வி நேரத்தின் போது எதிர்கட்சியினரின் கேள்விகள் தவிர்க்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.
கடந்த மூன்று வாரங்களாக, ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு பதிலளிக்கப்பட்டு வருவதாக, கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் நாடாளுமன்றத்தில் இன்று குற்றம்சாட்டினார்.
நிர்ணயிக்கப்பட்ட நேர வரம்பிற்குள் தாங்கள் கேள்விகளை சமர்ப்பித்தும் கூட, எதிர்கட்சியினரின் ஒரு கேள்வி கூட தேர்வு செய்யப்படுவதில்லை என்றும் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.
இதனையடுத்து அதற்குப் விளக்கமளித்த அன்வார், தான் எந்த ஒரு கேள்வியையும் தவிர்க்கவில்லை என்றும், சபாநாயகர் தேர்வு செய்யும் கேள்விகளுக்கு உடன்பட்டு பதிலளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், அமெரிக்க பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக எதிர்கட்சியினர் எழுப்பிய கேள்விக்குத் தாம் பதிலளித்ததைச் சுட்டிக் காட்டிய அன்வார், ஒரே மாதிரியான கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப்படும் போது அவை இயல்பாகவே தவிர்க்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு கேள்விக்கு ஏற்கனவே பதிலளிக்கப்பட்டு, அது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டிருந்தால், அதே கேள்வி மீண்டும் கேட்கப்படும் போது அதற்கும் அதே பதில்தான் வழங்க இயலும். எனவே தான் சபாநாயகரின் முடிவை ஏற்றுக் கொண்டு பதிலளிப்பதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.








