கோலாலம்பூர், பிப்ரவரி.07-
"சட்டவிரோத வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான இயக்கம்" எனும் அமைப்பின் ஏற்பாட்டாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜசெக இளைஞர் பிரிவான DAPSY தேசியத் தலைவர் வூ கா லியோங் வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய போராட்டங்கள் இன மற்றும் மதங்களுக்கு இடையே பதற்றத்தை உருவாக்குவதோடு, நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் செயலாக அமைவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். குறிப்பாக, "சட்டவிரோதக் கோயில்" என்ற பதத்தைப் பயன்படுத்துவதை அனைத்துத் தரப்பினரும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் உள்ள பல ஆலயங்களும் வழிபாட்டுத் தலங்களும் நவீன நிலச் சட்டங்கள் மற்றும் நகரத் திட்டமிடல் சட்டங்கள் உருவாக்கப்படுவதற்கு முன்பே, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருவதை அவர் நினைவு கூர்ந்தார். இவற்றை வெறும் "சட்டவிரோதக் கட்டிடங்களாகப்" பார்க்காமல், நாட்டின் நீண்டகால வரலாற்று மரபு மற்றும் கலாசார அடையாளங்களாகக் கருத வேண்டும். இத்தகைய புனிதத் தலங்களை "ஹராம்" அல்லது "சட்டவிரோதம்" என்று முத்திரை குத்துவது தவறான புரிதலை ஏற்படுத்துவதோடு, இந்து சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயல் என்றும் வூ கா லியோங் குறிப்பிட்டார்.
நில உரிமை அல்லது கட்டிட அனுமதி தொடர்பான சிக்கல்கள் வெறும் நிர்வாகம் மற்றும் மேலாண்மை சார்ந்த விவகாரங்கள் மட்டுமே என DAPSY வலியுறுத்தியுள்ளது. இத்தகைய பிரச்சனைகளுக்குப் பேச்சுவார்த்தை, கலந்தாலோசனை மற்றும் பகுத்தறிவு ரீதியான தீர்வுகள் மூலமே தீர்வு காணப்பட வேண்டும். மாறாக, ஆத்திரமூட்டும் மற்றும் வெறுப்பைத் தூண்டும் வகையிலான போராட்டங்கள் அல்லது சொல்லாடல்கள் எதற்கும் தீர்வாகாது என்பதை பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினரான வூ கா லியோங் தெளிவுபடுத்தினார்.
மலேசிய அரசியலமைப்பின் கீழ் நாட்டு மக்களுக்குக் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்று கூடும் உரிமை இருந்தாலும், அது மற்றவர்களின் உரிமைகளையும் நாட்டின் நல்லிணக்கத்தையும் பாதிப்பதாக அமையக்கூடாது என வூ கா லியோங் தெரிவித்தார்.
வெறுப்புணர்வைத் தூண்டும் நபர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாகுபாடற்ற மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான தீர்வுகளின் மூலம் பல்லின சமூகத்தின் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் வூ கா லியோங் கேட்டுக் கொண்டுள்ளார்.








