கிள்ளான், நவ. 12-
2025 ஆம் ஆண்டு சிலாங்கூருக்கு வருகைத் தரும் ஆண்டை மேலும் சிறக்க வைப்பதற்கு சிலாங்கூர் மாநிலத்தில் முன்னணி மொத்த வியாபார வர்த்தக மையமான ஜிஎம்.கிள்ளான் , இவ்வாண்டு இறுதி தொடங்கி அடுத்த ஆண்டு முற்பகுதி வரையில் சிலாங்கூர் மாநில சுற்றுலாத்துறையை பலப்படுத்துவதற்கு பலதரப்பட்ட பிரத்தியேக பிரச்சாரங்களை மேற்கொள்ளவிருக்கிறது.

சிலாங்கூர் மாநில சுற்றுலாத்துறை, உள்ளூர் சுற்றுப்பயணிகளுக்கு மட்டுமின்றி அனைத்துலக சுற்றுப்பயணிகளையும் வெகுவாக கவரக்கூடிய மாநிலமாக திகழவேண்டும் என்ற மாநில அரசின் 2025 ஆம் ஆண்டுக்கான சுற்றுலா ஆண்டின் நோக்கத்திற்கு ஏற்ப ஜிஎம்.கிள்ளான் பலதரப்பட்ட பிரத்தியேக பிரச்சாரங்களை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த பிரச்சாரத்தின் தொடக்கவிழா, இன்று ஜிஎம்.கிள்ளான் மொத்த வியாபார மையத்தின் கீழ் தளத்தில் ஆட்ரியம் அரங்கில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இதனை சிலாங்கூர் மாநில ஊராட்சிமன்ற மற்றும் சுற்றுலா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ எங் சூயி லிம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

ஜிஎம்.கிள்ளான் நடத்தவிருக்கும் பிரச்சாரங்களில் ஒன்று, “Ke Mana Kita Lepas Borong” என்ற மொத்த சந்தைக்கு வந்தப்பிறகு நாம் எங்கே செல்வது என்பதாகும். ஜிஎம்.கிள்ளான் மொத்த வியாபார வர்த்தக மையத்திற்கு வருகைப்புரியும் மக்கள், சிலாங்கூர் மாநிலத்தில் இதர சுற்றுலாத்தலங்களை பிரபலப்படுத்த வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் நோக்கில் பிரத்தியேகமாக இந்தப் பிரச்சாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிகழ்வில் ஜிம் கிள்ளன் நிர்வாக இயக்குநர் டத்தோ லிம் செங் கொக், ஜிஎம். கிள்ளான் இயக்குநர் பூ லோக் பிங், ஜிஎம்.கிள்ளானின் தொடர்புதுறை நிர்வாகி நோர்சுஹையிடா ஓத்மான், மலேசிய சுற்றலாத்துறையின் மத்தியப் பிராந்திய அலுவலகத்திற்கான இயக்குநர் இஞ்சே சுபியான் பின் ஸைனதீன் , சிலாங்கூர் மாநில சுற்றலாத்துறை இயக்குநர் குஸைய்மா பிந்தி ஜமாலுடிடன் ஆகியோர் கலந்து கொண்டனர்.









