கோலாலம்பூர், நவம்பர்.05-
அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் குடும்பத்திற்கு 3 மில்லியன் ரிங்கிட்டை இழப்பீடாக வழங்கும்படி, அரசாங்கத்திற்கும், போலீஸ் துறைக்கும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெர்லிஸைச் சேர்ந்த அந்த சமூக ஆர்வலர் காாணாமல் போனது தொடர்பில் உரிய விசாரணையை நடத்த போலீஸ் துறை தவறிவிட்டதாக நீதிபதி சூ தியாங் ஜூ தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
அரசாங்கமும் போலீஸ் துறையும் தங்களுக்கான சட்டப்பூர்வக் கடமைகளை மீறி விட்டதாகவும், அவர்களின் அதிகாரிகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நடந்து கொண்டதாகவும் நீதிபதி சூ தியாங் ஜூ குறிப்பிட்டார்.
பெர்லிஸ் மாநிலத்தில் பெர்லிஸ் ஹோப் என்ற அரசு சாரா இயக்கத்தின் தலைவரான அம்ரி சே மாட், கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் வெளியே செல்வதாகக் கூறி, வீட்டை விட்டுப் புறப்பட்டவர் பின்னர் வீடு வந்து சேரவில்லை.
அம்ரி சே மாட்டின் கார், மறுநாள் காலையில் பெர்லிஸ், புக்கிட் சாபாங் பள்ளி அருகில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சமூக ஆர்வலர் காணாமல் போனது தொடர்பில் போலீசார் உரிய விசாரணையை நடத்தத் தவறி விட்டதாகக் கூறி, அவரின் மனைவி நோர்ஹாயாத்தி அரிஃபின் அரசாங்கம் மற்றும் போலீஸ் துறைக்கு எதிராக வழக்கு தொடுத்தார்.








