தனது விமானச் சேவையை தற்காலிகமாக நிறுத்திக்கொண்ட மலேசிய சிக்கனக்கட்டண விமான நிறுவனமான மைஎர்லைன் எஸ்டிஎன் பிஎச்டி., கடந்த மாதம் மத்திய கிழக்கு முதலீட்டாளர்களுடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவலைத் தொடர்ந்து அந்த விமான நிறுவனத்தின் பொறுப்பாளர்களை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சந்திக்கவிருக்கிறார்.
புதிய முதலீட்டாளர்களுடன் எத்தகைய ஒப்பந்தத்தை மைஎர்லைன் செய்து கொண்டுள்ளது என்பது குறித்து தம்மால் உறுதிபடுத்த இயலவில்லை என்ற போதிலும் அந்த உள்ளூர் விமான நிறுவனத்தின் பொறுப்பாளர்களை தாம் விரைவில் சந்தித்து, அவர்களிடம் விளக்கங்களை கோரப் போவதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
MY Airline மீண்டும் தனது விமானச் சேவையை தொடங்குவதற்கு திட்டம் கொண்டு இருக்குமானால் அதற்கு முன்னதாக சில நிபந்தனைகளை அந்த உள்ளூர் சிக்கன கட்டண விமான நிறுவனத்திற்கு விதிக்கப்படும் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.
ஏற்கனவே டிக்கெட் முன் உறுதி செய்தவர்களுக்கு சேர வேண்டிய விமானக் கட்டணத்தை திருப்பிக்கொடுப்பது மற்றும் அந்த நிறுவனத்தின் முன்னாள் பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளப் பாக்கியை வழங்குவது ஆகியவை அந்த நிபந்தனைகளில் அடங்கும் என்று அந்தோணி லோக் குறிபிட்டார்.








