கோலாலம்பூர், பிப்ரவரி.26-
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தனது மனைவி டத்தின் ஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் உடனான 46-வது திருமண ஆண்டு விழாவை முன்னிட்டு, தனது சமூக ஊடகப் பக்கத்தில் அன்பும் நன்றியும் நிறைந்த வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினருமான வான் அஸிஸாவை, தனது வாழ்வின் இன்ப துன்பங்கள் அனைத்திலும் உறுதுணையாக நின்ற 'உண்மையான அன்பு' என வர்ணித்துள்ளார்.
"உன்னுடைய ஈடு இணையற்ற அன்பு, தியாகம் மற்றும் இடைவிடாத பிரார்த்தனைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நமது வாழ்க்கைப் பயணத்தை எல்லாம் வல்ல இறைவன் என்றும் ஆசீர்வதிக்கட்டும்," என அன்வார் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தமது வாழ்த்துச் செய்தியுடன், அவர்களின் பழைய மற்றும் தற்போதைய புகைப்படங்களை இணைத்த பிரதமர், பின்னணியில் Faizal Tahir பாடிய 'Sampai Syurga” பாடலையும் ஒலிக்கச் செய்துள்ளார். இது இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த 1980 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 அன்று இல்லற வாழ்வில் இணைந்த அன்வார் தம்பதியருக்கு நூருல் இசா உட்பட ஆறு பிள்ளைகள் உள்ளனர்.








