மலாக்கா, ஜூலை 9-
மாணவர் ஒருவரை கன்னத்தில் அறைந்ததுடன், தலைமுடியைப்பிடித்து இழுத்து காயம் விளைவித்ததாக மலாக்காவில் உள்ள பள்ளி ஒன்றின் கட்டொழுங்கு ஆசிரியர் இன்று மலாக்கா, அயர் கெரோஹ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
48 வயதான முகமது ஹெர்மேன் இஷாக் என்ற அந்த கட்டொழுங்கு ஆசிரியர் தனது செயலுக்காக மாஜிஸ்திரேட் கைருன்னிசாக் ஹஸ்னி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி காலை 11.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறை அல்லது 2 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த ஆசிரியர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








