Mar 31, 2026
Thisaigal NewsYouTube
தொழில் அதிபர் ஜோ லோ, மியன்மாரில் இருக்கிறாரா? தகவல் இல்லை என்கிறார் ஐஜிபி
தற்போதைய செய்திகள்

தொழில் அதிபர் ஜோ லோ, மியன்மாரில் இருக்கிறாரா? தகவல் இல்லை என்கிறார் ஐஜிபி

Share:

கோலாலம்பூர், நவ. 22-


நாட்டின் நிதி வளத்தை உலுக்கிய 1எம்.டி.பி. நிதி முறைகேட்டில் பிரதான குற்றவாளி என்று வகைப்படுத்தப்பட்டு, போலீசாரால் தேடப்பட்டு வரும் மலேசியத் தொழிலதிபர் ஜோ லோ தற்போது, மியன்மாரில் இருப்பதாக கூறப்படுவது தொடர்பில் எந்தவொரு தகவலும் இல்லை என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

ஜோ லோ மியன்மாரில் இருப்பதாக கூறப்படுவது தொடர்பில் அந்நாட்டிற்கு தலைமையேற்றுள்ள இராணுவம் எந்தவொரு தகவலையும் போலீசாருக்கு வழங்கவில்லை என்று ஐஜிபி குறிப்பிட்டார்.

அனைத்துலக அளவில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து மலேசியப் போலீஸ் படையில் உள்ள தகவல்களை மியன்மாருக்கு வழங்குவோம். அதேபோல் அவர்களிடம் உள்ள தகவல்களை மலேசிய போலீசாருக்கு வழங்குவார்கள். ஆனால், தேடப்படும் தொழில் அதிபர், மியன்மாரில் இருப்பதற்கான எந்தவொரு தகவலையும் மலேசியப் போலீசார் இதுவரையில் பெறவில்லை என்று டான்ஸ்ரீ ரஸாருடின் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் 19 ஆம் தேதி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசக்கின் வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா, போலீசாரால் தேடப்பட்டு வரும் மலேசிய தொழில் அதிபர் ஜோ லோ, மியன்மாரில் பதுங்கியிருப்பதாக தாம் நம்பபுவதாக குறிப்பிட்டு இருந்தார்.

மியன்மாரில் உள்ள ஜெனரல்கள், அந்த மலேசிய தொழில் அதிபருக்கு பாதுகாப்பு அளித்து வருவதாக தாம் கருதுவதாக முகமட் ஷாபி தெரிவித்து இருந்தார்.

1 எம்.டி.பி. முன்னாள் சட்ட ஆலோசகர் ஜஸ்மின் வான் லூவுக்கு, ஜோ லோ கடப்பிதழும் பெற்றுக்கொடுத்ததோடு, அந்தக் கடப்பிதழ் மூலம் ஜஸ்மின் வான் லூ, மலேசிய கடப்பிதழைப் பயன்படுத்தாமல் மியன்மாருக்குள் நுழைந்திருக்கிறார் என்று முகமட் ஷாபி குற்றஞ்சாட்டியது தொடர்பில் ஐஜிபி டான்ஸ்ரீ ரஸாருடின் எதிர்வினையாற்றினார்.

Related News