நாட்டில் முறையாகவும் பாதுகாப்பாகவும் வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் 'செர்மட் மடானி' என்ற புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தகுதியான ஓட்டுநர்கள் தங்களின் அசல் காப்பீட்டுத் தொகையிலிருந்து கூடுதலாக 10 விழுக்காடு வரை தள்ளுபடியைப் பெறலாம் எனப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
ஓட்டுநர்கள் தங்களின் வாகனக் காப்பீட்டை 'மைஜேபிஜே' செயலி மூலம் புதுப்பிக்கும் போது, அவர்களின் ஓட்டுநர் பதிவு மற்றும் போக்குவரத்து விதிமீறல் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தள்ளுபடி வழங்கப்படும். தற்போது நடைமுறையில் உள்ள அதிகபட்ச 55 விழுக்காடு 'என்சிடி' தள்ளுபடியுடன் சேர்த்து, சிறந்த ஓட்டுநர்கள் ஒட்டுமொத்தமாக 65 விழுக்காடு தள்ளுபடி பெற முடியும். இத்திட்டத்தில் தற்போது 10 காப்புறுதி நிறுவனங்கள் இணைந்துள்ளன என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.








