புத்ராஜெயா, ஆகஸ்ட்.03-
1.25 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சூரிய மின்சார கலப்புத் திட்ட ஊழல் வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவியான Rosmah Mansor, புதிய ஆதாரங்களைத் தாக்கல் செய்ய புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளார்.
கடந்த ஜூலை 21-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மேல்முறையீட்டு விசாரணையின் போது மூன்று புதிய ஆவணங்களை ஆதாரமாக ஏற்க நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
மேலும், மனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், அரசாங்கத் தரப்பு சாட்சியான Rayyan Radzwill Abdullah, விசாரணையின் போது தமக்கு எதிரான குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் சாட்சியம் அளிக்க அழுத்தம் கொடுக்கப்பட்டதாக Rosmah Mansor தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், தமது மேல்முறையீட்டு வழக்கில் புதிய ஆதாரங்களாக Messrs Shamsuddin & Co நிறுவனத்தின் ஜூலை 10-ஆம் தேதியிட்ட கடிதம், அதே நாளில் Rayyan Radzwill Abdullah அளித்த போலீஸ் புகார் மற்றும் அவரது சட்டப்பூர்வ உறுதிமொழி உள்ளிட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
மேலும், Rayyan Radzwill Abdullah-வை மீண்டும் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அவரது கூடுதல் வாய்மொழிச் சாட்சியை மேல்முறையீட்டு வழக்கில் புதிய ஆதாரமாக ஏற்க வேண்டும் என்றும் Rosmah கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவானது வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி விசாரணைக்கு வருகின்றது.
அதுவரை, செப்டம்பர் 1 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள மேல்முறையீட்டு விசாரணையை தற்காலிகமாக ஒத்தி வைக்கவும் Rosmah நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.








