ஜோகூர் பாரிசான் நேஷனல் தலைவரும், மாநில இடைக்கால மந்திரி பெசருமான டத்தோ ஆன் ஹாபிஸ்/ பெல்டா நிலக்குடியேற்றப் பகுதிக்குள் நுழைவதற்கு அரசாங்கம் எந்தத் தடையும் விதிக்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெளிவுபடுத்தியுள்ளார்.
இன்று டிங்கிலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், யாரும் பெல்டா-விற்குள் நுழையத் தடுக்கப்படவில்லை என்றும், ஆனால் மாநில அரசுகள் தங்களது சொந்த தேர்தல் பிரச்சாரங்களுக்கு கூட்டரசு அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்க்கக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.
முன்னதாக, பெல்டா நிலகுடியேற்றப்பகுதியான உலு பெலித்தோங்-இல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தான் பங்கேற்க தடை விதிக்கப்பட்டதாக ஆன் ஹாபிஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கிடையே, அண்மையில் மெர்டேகா மையம் நடத்திய புதிய கருத்துக்கணிப்பில், 52 விழுக்காடு ஆதரவுடன் மலேசியாவின் மிகவும் விரும்பப்படும் அரசியல் தலைவராகத் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்துப் பேசிய பிரதமர், இந்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்ததுடன், அரசாங்கத்தின் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்த இது ஊக்கமளிப்பதாகக் கூறினார்.








