புத்ராஜெயா, பிப்ரவரி.28-
மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் துன் டாயிம் ஸைனுடினின் பிள்ளைகளைத் தேடி பொது அறிவிப்பு வெளியிட்டது யாரையும் சங்கடப்படுத்துவதற்காக அல்ல என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் இன்று விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக, ஊழல் தடுப்பு ஆணையம், டாயிம் ஸைனுடினின் நான்கு பிள்ளைகளான அஸ்னிடா, வீரா டானி, அமீர் மற்றும் அமீன் ஆகியோரை விசாரணைக்கு உதவுவதற்காகத் தேடி வருவதாக நேற்று அறிவித்திருந்தது.
இது குறித்து இன்று மாலை விளக்கம் அளித்த அந்த ஆணையம், டாயிம் ஸைனுடினின் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட இரண்டு அதிகாரப்பூர்வ நோட்டீஸ்களுக்கு அவர்கள் பதிலளிக்கத் தவறியதைத் தொடர்ந்து, சட்டப்பூர்வமான அடுத்தக் கட்ட நடவடிக்கையாகவே இந்த பொது அறிவிப்பு வெளியிடப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
இது ஒரு தண்டனையோ அல்லது 'தேடப்படும் குற்றவாளி' பட்டியலோ அல்ல; மாறாக, விசாரணைக்கு சம்பந்தப்பட்டவர்களின் வருகையை உறுதிச் செய்வதற்கான ஒரு நடைமுறை மட்டுமே என்று எஸ்பிஆர்எம் குறிப்பிட்டுள்ளது.
போதிய கால அவகாசம் அளிக்கப்பட்டும் அவர்கள் ஒத்துழைக்கத் தவறியதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எஸ்பிஆர்எம் கூறுகிறது.








