பேராக் மாநிலம், சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு அருகேயுள்ள புதர் ஒன்றில், 14 வயதுடைய பள்ளி மாணவிகள் இருவர், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சமூகத்தை சேர்ந்த அந்த இரு இளம் பெண்களின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் அமைந்துள்ள 15 மாடிக் கட்டிடம், ஈப்போ நகர சபையின் மேற்பார்வையின் கீழ் உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு மேலாக ஆளில்லாமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ள அக்கட்டிடம் அருகே இந்த இரு இளம் பெண்களின் சடலம் எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமது அல்வி சைனல் ஆபிதீன் வெளியிட்ட அறிக்கையில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை இந்த இரு மாணவிகளும் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், இருவரும் பள்ளியை விட்டு தாமாகவே வெளியேறியதாக நம்பப்படுவதாகவும், இதுவரை குற்றச்செயல் நடந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், உடற்கூறு பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் ஆய்வு முடிவுகள் கிடைத்த பின்னரே உயிரிழப்புக்கான உண்மையான காரணம் உறுதி செய்யப்படும் என்றும் அவர் விவரித்துள்ளார்.








