கோலாலம்பூர், ஜூலை.11-
குடும்பம் சார்ந்த கொள்கைகள் இளைஞர்களின் தேவைகளை ஆதரிக்கும் சூழலியல் அமைப்பை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என மகளிர், குடும்பம், சமூக நல மேம்பாட்டு அமைச்சர் நான்சி ஷுக்ரி தெரிவித்துள்ளார். உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்ட அறிக்கையில், இளைஞர்கள் குடும்பம் அமைப்பதற்கானத் தடைகளான வாழ்க்கைச் செலவு, நிலையற்ற வேலை வாய்ப்பு, குழந்தை பராமரிப்பு வசதி இல்லாமை போன்றவற்றை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
மலேசியாவின் குறைந்த பிறப்பு விகிதமும் கருவுறுதல் விகிதமும் கவலை அளிப்பதாகவும், இந்த ஆண்டுக்கான உலக மக்கள் தொகை தினத்தின் கருப்பொருள் "இளைஞர்களை அவர்கள் விரும்பும் குடும்பங்களை நியாயமான, நம்பிக்கையான உலகில் உருவாக்க அதிகாரம் அளித்தல்" என்பதாகும். இந்தச் சாவல்களை எதிர்கொள்ள விரிவான உத்திகளை அமைச்சு செயல்படுத்தி வருவதாகவும், இதில் கருவுறுதல் சிகிச்சைக்கான மானியங்கள், நெகிழ்வான பெற்றோர் விடுமுறைகள் ஆகியவை அடங்கும் என்றும் அவர் கூறினார்.








