பெத்தாலிங் ஜெயா,ஜன.9
தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படும் அரசியல் சித்து விளையாட்டில் அரண்மனைக்கு தொடர்பு இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் அரண்மனை சம்பந்தப்படவில்லை என்று இஸ்தானா நெகாராவில் இன்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மாட் ஷாஹ் -வுடன் நடந்த சந்திப்பில் இது குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.
தவிர பிரதமர் என்ற முறையில் தமது தலைமையிலான அரசாங்கம், நாட்டு நிர்வாகப் பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்து வேண்டும் என்று மாமன்னர் தம்மை கேட்டுக்கொண்டதாக அன்வார் தெரிவித்தார்.
தமது தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு துபாய் நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், தமக்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்.பி.க்களை விலைக்கு வாங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுவது தொடர்பில் பிரதமர் விளக்கம் அளித்தார்.








