கோலாலம்பூர், பிப்ரவரி.04-
விவாகரத்து கோரிய தனது மனைவியின் முடிவிற்கு தனது மைத்துனரே காரணம் எனக் கூறி, கோலாலம்பூர், செராஸில் உள்ள பிபிஆர் டேசா துன் ராஸாக் குடியிருப்பில் உள்ள மைத்துனரின் வீட்டிற்கு நபர் ஒருவர், தீயிட்டு நாச வேலையில் ஈடுபட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று காலை 8.30 மணியளவில் நடந்ததாகத் தெரிவித்த செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் ரோஸ்டி டாவுட், 40 வயதுடைய அந்தச் சந்தேக நபர் தனது உடைமைகளை எடுத்துச் செல்வதற்காகப் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு வந்ததாகக் கூறினார்.
அப்போது தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் கத்திய அந்த நபர், தனது குடும்ப வாழ்க்கையில் விரிசல் ஏற்படப் புகார்தாரரான மைத்துனரே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தேவையற்ற சண்டையைத் தவிர்க்க விரும்பிய புகார்தாரர், அந்த நபரை வீட்டிற்குள் அனுமதிக்கச் செய்துவிட்டு, தாம் மட்டும் கட்டிடத்தின் படிக்கட்டு பகுதிக்குச் சென்று விட்டார். சிறிது நேரத்தில், புகார்தாரரின் வீடு தீப்பற்றி எரிவதாக அண்டை வீட்டார்கள் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர் .
இதனைத் தொடர்ந்து, அன்று காலை 11.25 மணியளவில் 34 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று முஹமட் ரோஸ்டி டாவுட் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.








