ஷா ஆலாம், நவம்பர்.28-
வெள்ளத் தடுப்பு கட்டுமானத்தில் சம்பந்தப்பட்டுள்ள குத்தகையாளர்களை அனுமதிப்பதில் தாமதம் காட்டி வருவதாகக் கூறப்படும் மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்எல்எம்மை கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சாம்புநாதன் கடுமையாகச் சாடினார்.
வெள்ளப் பாதிப்பை தடுக்கும் முயற்சிகளில் தடுப்புக் சுவர் கட்டுமானம் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். ஷா ஆலாம், தாமான் ஸ்ரீ மூடாவில் வசிப்பவர்கள் மழைக் காலத்தில் ஒவ்வொரு முறையும் வெள்ளப் பேரிடரை எதிர்கொண்டு வருவதை பிரகாஷ் சுட்டிக் காட்டினார்.
குத்தகையாளர்களை அனுமதிப்பதில் ஏற்பட்டுள்ள இந்த தாமதமானது, ஒரு தொழில்நுட்பப் பிரச்சினை அல்ல. இது, நிர்வாகத்திலும் ஒருங்கிணைப்பிலும் உள்ள இயலாமை மற்றும் கோளாறுகளாகும் என்று பிரகாஷ் குறிப்பிட்டார்.
மக்களின் அத்தியாவசியமான இந்த விவகாரம், பல ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்ந்து காலதாமதம் காட்டப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டு வருவதையும் அவர் தெளிவுப்படுத்தினார்.
இதன் தொடர்பில் ஜாலான் மந்தாப்பை நோக்கி நீர் ஓட்டத்தைத் தடுப்பதற்கும், கோத்தா கெமுனிங்கிலிருந்து ஸ்ரீ மூடாவிற்கு நீரோட்டத்தைத் திருப்பி விடவும் ஒரு புதிய வடிக்கால் முறையை கட்டி முடிப்பதற்கு ஆர்பிடி குத்தகையாளர்களை எல்எல்எம் உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று பிரகாஷ் வலியுறுத்தினார்.
எல்எல்எம் ஏற்படுத்தக்கூடிய இந்தத் தாமதத்தின் விளைவுகளினால் மக்கள் எவ்வளவு காலத்திற்குதான் சிரமத்தைத் தாங்கிக் கொள்ள முடியும் என்று பிரகாஷ் கேள்வி எழுப்பினார்.
இவ்விவகாரத்திற்கு வடிக்கால், நீர்ப்பாசனத்துறையும் அழுத்தம் கொடுத்து, துரிதம் காட்ட வேண்டும் என்று ஜசெக பிரதிநிதியான பிரகாஷ் வலியுறுத்தினார்.
வெள்ளத் தடுப்பு தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் சிறிதும் தாமதம் காட்டாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியிருப்பதையும் பிரகாஷ் சுட்டிக் காட்டினார்.








