பந்திங், பிப்ரவரி.06-
சிலாங்கூர், பந்திங், கம்போங் ஶ்ரீ சீடிங்கில் இன்று அதிகாலை மூன்று வீடுகளை அழித்த தீ விபத்தில் மூன்று வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். தீ விபத்தில் ஒவ்வொரு வீடும் சுமார் 90 விழுக்காடு வரை சேதமடைந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்த சிறுவனின் உடல் ஒரு வீட்டின் பிரதான படுக்கையறையில் கண்டெடுக்கப்பட்டது. அதிகாலை 2.44 மணிக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து, தெலுக் பங்லிமா காராங், பந்திங் மற்றும் கே.எல்.ஐ.ஏ (KLIA) ஆகிய நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.
அதிகாலை 2.56 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், 3.30 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயை அணைக்கும் பணியில் மொத்தம் 17 பணியாளர்கள் ஈடுபட்டனர். நான்கு தீயணைப்பு வாகனங்கள், அவசர மருத்துவ மீட்பு சேவை பிரிவு மற்றும் ஒரு தண்ணீர் டேங்கர் வாகனம் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
ஆரம்பக் கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








