இன்று மாலையில் ஜோகூர் பாருவில் பெய்த கனத்த மழையில் கடல் அலையைப் போல் சூழ்ந்து விட்ட வெள்ளத்தில் காருடன் சிக்கி பரிதவித்த ஒரு மூதாட்டி உட்பட இருவரை தீயணைப்பு, மீட்புப்படையினர் பாதுகாப்பாக மீட்டு, அவர்களை வெள்ளத்திலிருந்து காப்பாற்றியுள்ளனர். .
மாலை 4.38 மணிக்கு கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து தாமான் மொலெக், ஜாலான் பெர்சியாரான் மொலெக் உத்தாமாவில் ஒரு மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலையில் இரண்டு அடி உயரத்தில் வெள்ளம் சூழ்ந்து விட்ட இடத்திற்கு தீயணைப்பு, மீட்புப்படையினர் விரைந்தனர்.
புரோட்டோன் சகா காரில் பயணம் செய்த 70 வயது மூதாட்டி மற்றும் BMW ரக காரில் பயணம் செய்த மேலும் ஒருவர், தத்தம் வாகனங்களிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கி பரிதவித்தனர்.
தீயணைப்பு லோரியை பயன்படுத்தி அவ்விடத்திற்கு சென்ற வீரர்கள், அவ்விருவரையும் மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்ததாக தீயணைப்பு, மீட்புப்படை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








