தெலுக் இந்தான், நவ. 14-
மக்கள் நாட்டுப்பற்று பேரணி என்ற பெயரில் நாளை மறுநாள் சனிக்கிழமை தெலுக் இந்தான், சாய்வுக்கோபுர சதுக்கத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பேரணியில் மக்கள் பங்கேற்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தப் பேரணிக்கு போலீஸ் துறை அனுமதி வழங்கவில்லை என்பதுடன் பெர்மிட்டையும் வெளியிடவில்லை என்று ஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அகமட் அட்னான் தெரிவித்தார்.
தவிர அந்த சாய்வுக் கோபுரம் வீற்றிக்கும் சதுக்கம், தெலுக் இந்தான் நகராண்மைக்கழகத்திற்கு சொந்தமானதாகும். இப்பேரணி தொடர்பில் நகராண்மைக்கழகமும் எந்தவொரு அனுமதியையும் வழங்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தப் பேரணி, 2012 ஆம் ஆண்டு அமைதிப்பேரணி சட்டத்தின் நிபந்தனைகளை நிறைவு செய்யும் வகையில் இல்லை. எனவே இந்தப் பேரணியில் கலந்து கொள்கின்றவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏசிபி அகமட் அட்னான் எச்சரித்துள்ளார்.








