மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கியின் பங்கு சர்ச்சை தொடர்பான விசாரணை அறிக்கையும், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.
அட்டர்னி ஜெனரல் டான்ஸ்ரீ முகமட் டுசுகி மொக்தார் தலைமையிலான விசாரணைக் குழு தனது அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்தாலும் கூட, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதுவரை தெளிவான விளக்கம் வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விசாரணையின் தற்போதைய நிலை மற்றும் தொடர் நடவடிக்கைகள் குறித்து அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் அமைச்சரவைக்கு இதுவரை தெளிவான விளக்கம் வழங்கப்படவில்லை என்றும் கோபிந்த் சிங் தெரிவித்துள்ளார்.
அசாம் பாக்கி, வெலாசிட்டி கேபிடல் பார்ட்னர் பிஎச்டி என்ற நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி பங்குகள் வைத்திருந்ததாக புளூம்பெர்க் வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து இந்த விவகாரம் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், தாம் விதிமுறைகளை மீறவில்லை என விளக்கம் அளித்து வந்த அசாம் பாக்கி, கடந்த மே 12-ஆம் தேதி தமது பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.








