பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.29-
சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையில், பன்றி உருவத்தைப் பதிவிட்ட முகநூல் கணக்கு, ஒரு போலியான கணக்கு என்று தகவல், தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அந்த முகநூல் பக்கத்தின் உரிமையாளரிடம் மலேசியத் தகவல், தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான (MCMC) விசாரணை நடத்திய போது, அந்தப் பதிவை அவர் பதிவிடவில்லை என மறுத்துள்ளார். சமூகத்தில் பதற்றத்தை உருவாக்க யாரேனும் விஷமிகள் திட்டமிட்டு இந்தப் போலிக் கணக்கைப் பயன்படுத்தினார்களா என்பது குறித்து போலீஸ் துறை மற்றும் மேட்டா (Meta) நிறுவனத்துடன் இணைந்து தடயவியல் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
சிலாங்கூரில் பன்றி வளர்ப்பு தொடர்பான விவாதங்கள் நடந்து வரும் நிலையில், சுல்தானின் உத்தரவுக்கு எதிராக இத்தகைய சர்ச்சைக்குரிய பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டவுடன் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டத்தோ ஃபாமி உறுதி அளித்துள்ளார்.








