கிள்ளான் பள்ளத்தாக்கில் தொடரும் வெள்ளப் பிரச்சினையைச் சமாளிக்க, சிலாங்கூர் மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து ஐந்து முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன.
மத்திய அமைச்சர் ஹன்னா யோ மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி ஆகியோரின் சந்திப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பத்து அணை மற்றும் கிள்ளான் கேட் அணைகளின் நீர் கொள்ளளவை மறுஆய்வு செய்வது, புதிய வெள்ளத் தடுப்புக் குளங்களுக்கான இடங்களை கண்டறிவது, ஏற்கனவே உள்ள மூன்று குளங்களின் கொள்ளளவை அதிகரிப்பது மற்றும் ஆறுகளில் தூர்வாரும் பணிகளை ஒருங்கிணைப்பது முக்கிய நடவடிக்கைகளாகும்.
இந்தத் திட்டங்களின் இடம், செலவு, நிதி ஆதாரம் மற்றும் செயல்பாட்டு முறைகள் குறித்து இரண்டு வாரங்களுக்குள் தொழில்நுட்பக் கூட்டம் நடத்தப்படும்.
வரும் அக்டோபர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு முன்பாக ஆரம்பகட்ட திட்ட விவரங்கள் தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் வாழும் மக்கள் தொகை மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் இவ்விரு பகுதிகளின் முக்கிய பங்களிப்பை கருத்தில் கொண்டு, வெள்ளப் பிரச்சினைக்கு அவசரத் தீர்வு காண வேண்டியது அவசியம் என மத்திய அரசாங்கமும், சிலாங்கூர் அரசும் வலியுறுத்தியுள்ளன.








