பினாங்கு, பாயான் பாரு, Queensbay கடற்கரையில் நேற்று மாலையில் பெண் குழந்தை ஒன்றின் உடல் கரை ஒதுங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மாலை 5:55 மணியளவில் கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு போலீசார் விரைந்ததாக பினாங்கு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கமாருல் ரிசால் ஜெனால் கூறினார்.
அப்பெண் குழந்தையின் உடல் வேறொரு இடத்திலிருந்து கடல் அலையினால் அடித்து வரப்பட்டிருக்கலாம் என்றும், குழந்தையின் உடலில் ஆடை ஏதுமில்லை என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஏசிபி கமாருல் ரிசால் அறிவித்தார்.
மருத்துவ பரிசோதனைக்காக குழந்தையின் உடல், பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் 318 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஏசிபி கமாருல் ரிசால் தெரிவித்தார்.








