கோலாலம்பூர், பிப்ரவரி.08-
கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக் பகுதியில் காரின் பின் கதவு திடீரென திறக்கப்பட்டதால் ஏற்பட்ட விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவரின் இடது கை முறிந்தது. காரின் பின் இருக்கையில் ஓர் உறவினரால் மடியில் அமர வைக்கப்பட்டிருந்த இரண்டு வயது சிறுமி, எதிர்பாராத விதமாக கதவைத் திறந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை, அமலாக்கத் துறைத் தலைவர், துணை ஆணையர் முஹமட் ஸம்ஸுரி முஹமட் இசா தெரிவித்தார்.
அந்தச் சமயம் சம்பந்தப்பட்ட பாதையில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரால் திடீரெனத் திறக்கப்பட்ட கதவைத் தவிர்க்க முடியாமல் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. கார்களில் உள்ள Child Lock பயன்படுத்தப்படாததால் அந்தச் சிறுமியால் கதவைத் திறக்க முடிந்ததாக முஹமட் ஸம்ஸுரி தெரிவித்தார். இந்த விபத்தின் தொடர்ச்சியாக மேலும் ஒரு மோட்டார் சைக்கிளும் நான்கு கார்களும் சேதமடைந்த நிலையில், காவற்படையினர் இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.








