பேராக், பீடோரில் முஸ்லிம் அல்லாதவர்களின் நீண்டக்காலக் கோரிக்கையான நவீன மின்சுடலை பிரச்னைக்குத் மாநில மனிதவளம்,சுகாதாரம்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் முஸ்லிம் அல்லாதவர் பிரிவுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசன் தலைமையில் தீர்வுகாணப்பட்டது.
வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 10 நிமிடப் பயணத்தூரத்தில் பீடோரில் 1.3 ஏக்கர் நிலத்தில் 3 மில்லியன் ரிங்கிட் செலவில் நவீன மின்சுடலை அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று காலையில் டத்தோ சிவநேசன் தலைமையில் நடந்தேறியதன் வாயிலாக இவ்வட்டார மக்களின் நீண்டக்கால கோரிக்கைக்கு விடியல் பிறந்துள்ளது. .
முஸ்லிம் அல்லாதவர்களுக்காக உருவாக்கப்படும் இந்த நவீன மின்சுடலையின் கட்டுமானப்பணி அடுத்த ஐந்து மாதங்களில் நிறைவு பெறும் எனவும் நடப்பு சூழலில் 2 எரியூட்டும் அடுப்புகளுடன் உருவாக்கப்படும் இந்த மின்சுடலையில் பிறகு மூன்றாவது எரியூட்டும் அடுப்பும் இணைக்கப்படும் என்று டத்தோ சிவநேசன் குறிப்பிட்டார்.
"பீடோரில் நவீன மின்சுடலை அமையவிருப்பது இப்பகுதி மக்களுக்கு முக்கிய தேவையாகும். இதன் மூலம் தஞ்சோங் மாலிம் முதல் தாப்பா வரையிலான மக்கள் மட்டுமின்றி, சிலாங்கூர் மாநிலத்தின் உலுபெர்ணம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதி மக்களும் பயனடைவார்கள் என்று டத்தோ சிவநேசன் தெரிவித்தார்.
இதன் அடிக்கல் நாட்டு விழாவில் சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், சீனப் பிரதிநிதிகள், இந்து சங்கப் பொறுப்பாளர்கள், ஆலய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பல இனத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.












