மலேசிய மக்கள் உரிமை கூட்டணி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ள பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி, பல்லினத்தவர் கட்சி என்ற கோட்பாட்டின் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். தங்களை பல்லினத்தவர் கட்சி என்று கூறிக்கொள்ளும் கட்சிகள், மலேசிய இந்தியர்களை பிரதிநிதிக்கவில்லை என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.
கோலாலம்பூர், ஜாலான் துன் ஹ்.எஸ் லீ யில் உள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான மண்படத்தில் நேற்று மாலையில் தமது தலைமையில் உரிமை என்ற புதிய அரசியல் கட்சியை தோற்றுவித்த டாக்டர் இராமசாமி, உரிமை கட்சி, மஇகாவிற்கு எதிரி அல்ல என்று அறிவித்துள்ளார்.
அதேவேளையில் பல்லினத்தவர்கள் கட்சி என்று கூறிக்கொள்ளும் கட்சிகளே தங்களுக்கு எதிரியாகும் என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.அக்கட்சிகளில் இந்தியர்கள் அதிகமாக உள்ளனர். ஆனால், இந்தியர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர் என்றார்.
தமது தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உரிமை கட்சி, எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்காது என்று டாக்டர் இராமசாமி உறுதி அளித்தார்.








