கோலாலம்பூர்,ஜூலை 27-
அனைத்து மொழிப்பள்ளிகளுக்கும் போதிய நிதியை அரசாங்கம் ஒதுக்கவில்லை என்றால் அப்பள்ளிகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கும், மாணவர்களின் நலன் சார்ந்த அம்சங்களுக்கும் சில நிறுவனங்கள் நிதி திரட்டும் நடவடிக்கையை அரசாங்கம் கட்டுப்படுத்தக்கூடாது என்று கெராக்கான் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
அனைத்து பள்ளிகளுக்கும் அரசாங்கம் போதுமான நிதியை நியாயமான அளவில் ஒதுக்கீடு செய்யுமானால் அப்பள்ளிகள் ஏன் பிறரிடம் கையேந்தப் போகின்றன என்று கெராக்கான் கட்சித் தலைவர் Dr Dominic Lau கேள்வி எழுப்பினார்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அதீத அக்கறை காட்டி வரும் சீனப்பள்ளிகள், கற்றல் கற்பித்தலை மேம்படுத்துவதற்கு, மாணவர்களுக்கு தரமான கல்விச்சூழலை ஏற்படுத்திக்கொள்வதற்கு நிதி திரட்டும் நடவடிக்கையை ஒரு நீண்ட காலமாகவே, ஒரு பாரம்பரியமாக கடைப்பிடித்து வருகின்றன.
தனது சமுதாயத்தை சார்ந்த பலதரப்பட்ட பின்னணியைக் கொண்டவர்கள் சீனப்பள்ளிகளுக்கு உதவி வருகின்றனர். ஓர் உன்னத நோக்கத்திற்காக உதவிடும் இந்த திட்டத்தை மதுபான நிறுவனம் என்று முத்திரைக் குத்தி அந்தப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு கிடைத்து வரும் நிதி உதவியை அரசாங்கம் கட்டுப்படுத்தி விடக்கூடாது.
நிதி உதவி கிடைப்பதை அரசாங்கம் அல்லது கல்வி அமைச்சு கட்டுப்படுத்துமானால் அந்தப் பள்ளிகளுக்கு தேவைப்படக்கூடிய நிதியை அரசாங்கமே முழுமையாக ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும் என்று டோமினிக் லாவ் வலியுறுத்தியுள்ளார்.








