மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக பக்காத்தான் ஹராப்பானும் பாரிசான் நேஷனலும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் இயக்குநர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, கூட்டணித் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை நேற்று சந்தித்ததை தகவல் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபட்சில் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், அந்தச் சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்து தனக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
கடந்த ஒரு சில நாட்களாக கூட்டணித் தலைவர்கள் மத்தியில் பல சந்திப்புகளும் ஆலோசனைகளும் நடைபெற்று வருவதாகவும் ஃபஹ்மி தெரிவித்தார்.
இதனிடையே, மலாக்கா தேர்தலில் பாரிசான் நேஷனலுடன் இணைந்து செயல்படுவது குறித்து பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் குழு ஆராயும் என அன்வார் ஏற்கனவே கூறியிருந்தார். அந்தக் குழுவுக்கு பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் இயக்குநர் என்ற முறையில் அமிருடின் ஷாரி தலைமை வகிப்பதுடன், உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் செயலாளராக உள்ளார்.
மலாக்கா தேர்தலை முன்னிட்டு பாரிசான் நேஷனல் உடனான ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமிருடின்–அன்வார் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.








