கோலாலம்பூர், பிப்ரவரி.05-
கடந்த திங்கட்கிழமை பத்துகேவ்ஸ் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், 19-வது மாடியிலிருந்து விழுந்ததாக நம்பப்படும் இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மாலை 5.49 மணியளவில் கிடைத்த தகவலின் அடிப்படையில், கோம்பாக் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், செலாயாங் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இருப்பினும், சம்பவ இடத்திலேயே அப்பெண் இறந்து காணப்பட்டதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் நூர் அரிஃபின் முஹமட் நாசீர் தெரிவித்துள்ளார்.
அந்த 19 வயது பெண்ணின் இறப்பில் குற்றச் செயல்கள் எதுவும் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவ்வழக்கானது, திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் நூர் அரிஃபின் குறிப்பிட்டுள்ளார்.








