கோலாலம்பூர் கே.எல்.சி.சி அருகே வெளிநாட்டு சுற்றுலாப் பயணியைத் தாக்கியதைத் தட்டிக்கேட்ட இருவரைப் பலமாகத் தாக்கியதாக, 18 ஆடவர்கள் போலீஸ் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், தாக்குதலைத் தடுக்க முயன்றவர்களின் தலையில் ‘கெராம்பிட்’ ரகக் கத்தியால் குத்தப்பட்டதோடு, சுமார் 30 பேர் கொண்ட கும்பல் அவர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் அப்பகுதியில் குளிர்பானம் விற்பனை செய்பவர்கள் எனத் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 17 முதல் 45 வயதுடைய அந்த 18 பேரும், அங்கு அனுமதியின்றிச் செயல்படும் ‘உலாட் போட்டோ’ எனும் சட்டவிரோத புகைப்படக் கலைஞர்கள் என்பதைப் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தற்போது இந்த சம்பவம், கலவரம் விளைவித்தல் சட்டப்பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.எஸ்.பி. சசாலி ஆடம் தெரிவித்துள்ளளார்.








