வரும் நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி திருநாள் கொண்டாடப்படும் வேளையில் இவ்வாரம் இறுதியில் பிரதான நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணத்திற்கு விலக்களிப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று பொதுப்பணி துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ரஹ்மான் முஹமாட் தெரிவித்தார்.
தீபாவளி திருநாளையொட்டி டோல் கட்டணத்திற்கு விலக்களிப்பு வழங்குவதா? இல்லையா? என்பது குறித்து நிதி அமைச்சு மட்டுமே அறிவிக்க இயலும் என்று அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டார்.
இம்முறை தீபாவளி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவிருப்பதால் மறுநாள் திங்கட்கிழமை பொது விடுமுறை வழங்கப்படுகிறது. இந்நிலையில் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் சூழல் உள்ளது. மலேசியர்கள் தங்கள் பெருநாட்களை கொண்டாடும் போது, டோல் கட்டணத்திற்கு விலக்களிப்பு வழங்குவது, வழக்கமான நடைமுறையாக இருப்பதால், அது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் நிதி அமைச்சு மட்டுமே முடிவு செய்ய இயலும் என்று துணை அமைச்சர் விளக்கினார்.
தீபாவளி திருநாள் கொண்டாடப்படுவதற்கு இன்னும் 6 நாட்களே எஞ்சியுள்ள வேளையில் டோல் கட்டணத்திற்கு விலக்களிப்பது வழங்குவது குறித்து இதுவரையில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்பதை மட்டுமே தற்போதைக்கு தம்மால் சொல்ல இயலும் என்ற அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டார்.








