நாட்டின் அமைதியை காப்பதும், பொது ஒழுங்கைப் பேணுவதும் காவல் துறையினரின் முதன்மை கடமை. இஃது ஓர் அடிப்படைப் பொறுப்பு, இதில் சமரசம் செய்ய முடியாது. இருப்பினும், அண்மைய காலமாக, இன வெறுப்பைக் கக்குபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாததை இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சுட்டிக் காட்டினார். இதன் விளைவாக நமது நாட்டின் ஒற்றுமைக்கு நேரடியாக அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளது என அவர் குறிப்பிட்டார்.
திருக்குர்ஆனை அவமதித்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இச்செயலை புரிந்தவர்கள் மீது வழக்குத் தொடர அதிகாரிகள் எடுத்த விரைவான நடவடிக்கை பாராட்டத்தக்கது. அதே வேளையில் அத்தகைய நடத்தை கண்டிக்கத்தக்கது.
அதேபோல், இந்து சமூகத்தின் புனித மத அடையாளமான சூலத்திற்கு எதிராக செய்யப்படும் எந்தவொரு செயல்களுக்கும் எதிராக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். காவல்துறையினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோபிந்த் சிங் கேட்டுக்கொண்டார்.
இதுபோன்ற வழக்குகளில் உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறுவது இனங்களுக்கிடையிலான பதற்றத்தை அதிகரிக்கும். நாம் இன நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் பராமரிக்க வேண்டும், அதற்கான ஒரே வழி பயமோ அல்லது பாரபட்சமோ இல்லாமல் சட்டத்தை நிலைநிறுத்தச் செயல்படுத்துவதுதான் என அவர் வலியுறுத்தினார்.
இது குறித்து நேற்று அமைச்சரவையில் கேள்வி எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டது. அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது எனக் கூறிய அவர், அமலாக்க நிறுவனங்கள் அதை பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மதச் சின்னங்களை அவமதித்ததற்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து நீதிமன்றத்தில் நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோபிந்த் சிங் தேசிய காவற்படையை க் கேட்டுக்கொண்டதுடன், மலேசியா சட்ட விரோதமான நிலைக்கோ அல்லது இனக் கலவரத்திற்கு வித்திடும் செயல்களுக்கோ வழிவிடக் கூடாது என உறுதிபடத் தெரிவித்தார்.
பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், நாம் கட்டிக் காத்த அமைதியை குலைக்க முயல்பவர்களிடமிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவும் காவற்படை இப்போதே செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்








